சிக்பள்ளாப்பூர் அருகே பயங்கரம்: வரதட்சணை வாங்கி வர மறுத்த கர்ப்பிணி கொலை கணவர், மாமியார் கைது

சிக்பள்ளாப்பூர் அருகே வரதட்சணை வாங்கி வர மறுத்த 3 மாத கர்ப்பிணியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
சிக்பள்ளாப்பூர் அருகே பயங்கரம்: வரதட்சணை வாங்கி வர மறுத்த கர்ப்பிணி கொலை கணவர், மாமியார் கைது
Published on

சிக்பள்ளாப்பூர்,

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா துக்கநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா (வயது 22). இவருக்கும் காசாபுரா கிராமத்தில் வசித்து வரும் மது என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. திருமணம் முடிந்த புதிதில் மதுவும், பவித்ராவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் பவித்ரா கர்ப்பமானார்.

அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மதுவும், அவரது தாயும் சேர்ந்து வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு பவித்ராவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால் வரதட்சணை வாங்கி வர பவித்ரா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மதுவும், அவரது தாயும் சேர்ந்து பவித்ராவை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் வரதட்சணை வாங்கி வருவது தொடர்பாக மதுவுக்கும், பவித்ராவுக்கும் இடையே சண்டை உண்டானது. அப்போது பவித்ராவை, மதுவும் அவரது தாயும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த பாகேபள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பவித்ராவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பாகேபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுவையும், அவரது தாயையும் கைது செய்தனர். வரதட்சணை வாங்கி வர மறுத்த கர்ப்பிணி கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகேபள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com