ரசிகர் மன்ற தலைவர் கொலையில் 5 பேரிடம் தீவிர விசாரணை பதவி தகராறில் உறவினரே தீர்த்துகட்டியது அம்பலம்

நடிகர் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொலையில் 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பதவி தகராறில் உறவினரே தீர்த்து கட்டியது அம்பலமாகியுள்ளது.
ரசிகர் மன்ற தலைவர் கொலையில் 5 பேரிடம் தீவிர விசாரணை பதவி தகராறில் உறவினரே தீர்த்துகட்டியது அம்பலம்
Published on

புதுச்சேரி,

புதுவை கோவிந்தசாலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). பெயிண்டரான இவர் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவராகவும் இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகே ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

உறவினர்

விசாரணையில் மணிகண்டனின் உறவினரான ராஜசேகர் என்பவரே இந்த கொலையினை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து செய்தது தெரியவந்துள்ளது. ரசிகர் மன்ற பதவி தொடர்பான தகராறில் இந்த கொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

அதாவது விஜய்சேதுபதி ரசிகர் மன்ற தலைவராக மணிகண்டன் இருந்து வந்த நிலையில் ராஜசேகர் செயலாளராக இருந்தார். ஆனால் அவர் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ராஜசேகர் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

5 பேர் சிக்கினர்

இதற்கு மணிகண்டன் தான் காரணம் என அவர் நினைத்தார். இருந்தபோதிலும் அவர் தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டார். இதனால் அவர்களுக்கு இடையேயான மோதல் அதிகரித்தது. இதன்காரணமாகத்தான் மணிகண்டன் வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கொலையில் தொடர்புடைய 5 பேர் தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com