தளர்வில்லாத முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடியது

தளர்வில்லாத முழு ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடியது.
தளர்வில்லாத முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடியது
Published on

நெல்லை,

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது. மேலும் கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல் இந்த மாத ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதையொட்டி நெல்லையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகளும் வெறிச்சோடியது. இதேபோல் சேரன்மாதேவி, முக்கூடல், அம்பை, விக்கிரமசிங்கபுரம், நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி, ராதாபுரம், மானூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. இருந்தபோதிலும் அத்தியாவசிய தேவையின்றி வந்தோரை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். மேலும் சிலரது வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பால், மருந்தகம் உள்ளிட்ட கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.

பாவூர்சத்திரத்தில் நெல்லை-தென்காசி ரோடு, பாவூர்சத்திரம்-கடையம் ரோடு, பாவூர்சத்திரம்- சுரண்டை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பாவூர்சத்திரம் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. கார், ஆட்டோ, வேன் எதுவும் இயங்கவில்லை. அத்துடன் மர ஆலைகள், ஓடு தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

இதேபோல் செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம் ஆகிய பகுதிகளிலும் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com