

குன்னூர்,
குன்னூர் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரமாக ரேலியா அணை உள்ளது. 14 ஏக்கர் பரப் பளவில் உள்ள இந்த அணையின் கட்டுமான பணி 1938-ம் ஆண்டு தொடங்கி 1941-ம் ஆண்டு நிறைவு பெற்றது. ரேலியா அணையின் நீர்மட்டம் 43.6 அடி ஆகும்.
வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் பெய்யும் மழை காரணமாக ரேலியா அணை நிரம்புவது உண்டு. கோடை காலங்களில் பெரும்பாலும் அணையின் நீர்மட்டம் குறைவாகவே இருக்கும். இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்து வரு கிறது. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி தனது முழு கொள்ளளவான 43.6 அடியை எட்டி நிரம்பி வழிந்தது.
இந்த நிலையில் குன்னூர் நகராட்சி நிர்வாகம், சீசன் காலத்திற்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் எடுத்து வந்தது. மேலும் பொதுமக்களுக்கு மற்ற நீராதாரங்களில் இருந்தே தண்ணீர் கொடுத்து வந்தது.
குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சிறிதளவு உயர்ந்தது. குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் பகலிலும், இரவிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக 32 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. இதன் மூலம் அணையின் நீர்மட்டம் 42 அடியை தொட்டு கடல்போல் காட்சி அளிக்கிறது.
ரேலியா அணை தனது முழு கொள்ளளவை எட்ட இன்னும் 1.6 அடி மட்டுமே தேவை. மழை காரணமாக அணை நிரம்ப உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
எனவே அணையில் முழு அளவுக்கு தண்ணீர் இருக்கும் நிலையில் பொதுமக்கள் சீரான முறையில் தண்ணீர் வழங்க வேண்டும். அதை திட்டமிட்டு அதிகாரிகள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.