ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் உரிமையாளர்கள் சாலை மறியல்

தேன்கனிக்கோட்டையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. இதை கண்டித்து உரிமையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் உரிமையாளர்கள் சாலை மறியல்
Published on

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் வனச்சரக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வனச்சரக அலுவலகத்தின் முன்பு சிலர் வனத்துறை அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளனர். விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு வனத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந்த நிலையில் நேற்று வனத்துறை அதிகாரிகள், தேன்கனிக்கோட்டை போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடை உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் அப்பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டனர். இதற்கிடையே சிலர் வனத்துறை ஊழியர்களின் 4 மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தினர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com