ரூ.10 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் மகன் மீட்பு

ரூ.10 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட நந்துர்பர் தொழில் அதிபரின் மகனை போலீசார் காஷிமிராவில் வைத்து மீட்டனர். இது தொடர்பாக போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூ.10 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் மகன் மீட்பு
Published on

தானே,

நந்துர்பர் மாவட்டம் அக்கல்குவா பகுதியை சேர்ந்த வாலிபர் ரிஸ்வான் மேமன்(வயது22). இவரது தந்தை தொழில் அதிபர் ஆவார். இந்தநிலையில், ரிஸ்வான் மேமனை கடந்த தில தினங்களுக்கு முன் மர்ம ஆசாமிகள் கடத்திச்சென்றனர். பின்னர் அவர்கள் அவரது தந்தைக்கு போன் செய்து ரூ.10 லட்சம் கேட்டனர். இல்லையெனில் ரிஸ்வான் மேமனை கொலை செய்து விடுவோம் என்றுமிரட்டினர்.

இதனால் பயந்துபோன தொழில் அதிபர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் கடத்தல்காரர்கள் பேசிய செல்போன் எண் இருக்கும் இடத்தை அலைவரிசை மூலம் ஆராய்ந்தனர்.

இதில், ரிஸ்வான் மேமனை கடத்திய ஆசாமிகள் தானே காஷிமிரா பகுதியில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கும்பலை பிடிக்க போலீசார் கொடுத்த யோசனையின்படிதொழில் அதிபர் அந்த ஆசாமிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கள் காஷிமிராவுக்கு வந்து பணத்தை தந்துவிட்டு மகனை மீட்டுச்செல்லும் படி கூறினார்கள்.

இதுபற்றி நந்துர்பர் போலீசார் தானே குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல்கொடுத்து உஷார்படுத்தினர். இதையடுத்து, தானே குற்றப்பிரிவு போலீசார் காஷிமிராவில் குறிப்பிட்ட இடத்துக்கு நேற்று முன்தினம் சென்று கண்காணித்தனர்.

அப்போது அங்கு ரிஸ்வான் மேமனின் தந்தை பணத்துடன் வந்தார். சிறிது நேரத்தில் அங்கு 2 பேர் வந்து அவரிடம் பணத்தை வாங்கினார்கள். அப்போது, அங்கு மறைந்து இருந்த போலீசார் அந்த ஆசாமிகள் 2 பேரையும் சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரிஸ்வான் மேமனையும் பத்திரமாக மீட்டனர்.

விசாரணையில், கைதானவர்கள் பெயர் தீபக் (வயது33), சோகில் பஞ்சாபி ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில், தீபக் தானே வர்த்தக்நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com