வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட 7 அடி ஆழ குழியில் விழுந்த சிறுமி ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

விழுப்புரம் அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட 7 அடி ஆழ குழியில் விழுந்த சிறுமி, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டாள்.
வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட 7 அடி ஆழ குழியில் விழுந்த சிறுமி ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு
Published on

விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் அரியூரை சேர்ந்தவர் பாஸ்கரன். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் கோபினி(வயது 4). பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக பாஸ்கரன், தனது குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபுசமுத்திரம் கிராமத்தில் உள்ள தனது அக்காள் சரோஜினி வீட்டிற்கு சென்றார்.

இதனிடையே தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் சரோஜினி, தனது பழைய வீட்டின் அருகிலேயே பில்லர் எழுப்புவதற்காக எந்திரம் மூலம் 7 அடி ஆழத்தில் குழிகள் தோண்டினார். அப்போது அதன் அருகில், சிறுமி கோபினி விளையாடிக்கொண்டிருந்தாள். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக கோபினி, ஒரு குழியில் விழுந்தாள். இதனால் பயந்துபோன அவள், காப்பாற்றுமாறு அழுதாள். அவளது அலறல் சத்தம் கேட்டு, பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவளை உடனடியாக மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனிடையே அங்கு ஏராளமானோர் கூடினர்.

சிறுமி மீட்பு

இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. அந்த எந்திரம் மூலம், குழியின் அருகில் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளத்தில் 2 வாலிபர்கள் இறங்கி, சிறுமி இருந்த குழி நோக்கி துளையிட்டனர். பின்னர் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், சிறுமி கோபினி உயிருடன் மீட்கப்பட்டாள். சிறுமியை பார்த்ததும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர். குழியில் விழுந்த சிறுமி மீட்கப்பட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com