ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம்

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு கல்லிடைக்குறிச்சி கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலைக்கு நேற்று சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம்
Published on

அம்பை,

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் அறம்வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் கடந்த 1982-ம் ஆண்டு ஐம்பொன்னால் ஆன நடராஜர் உள்ளிட்ட 4 சாமி சிலைகள் திருடப்பட்டன. இந்த சிலைகள் குறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த போலீசாரின் தீவிர முயற்சியில் நடராஜர் சிலை கடத்தி செல்லப்பட்டு ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரியவந்தது.

பின்னர் முறையான அனுமதி பெற்று அங்கு இருந்து சென்னை கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை, கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டது. பின்னர் கடந்த 24-ந் தேதி கல்லிடைக்குறிச்சிக்கு கொண்டு வரப்பட்ட சிலை பக்தர்கள் திரண்டிருந்து மேளதாளம் முழங்க வரவேற்பு கொடுத்து வழிபாடு நடத்தினர். ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்ட நடராஜர் சிலை கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

அந்த நடராஜர் சிலைக்கு நேற்றுமுன்தினம் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, 1,008 கலச பூஜை, 2-ம் கால பூஜை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடைபெற்றன. காலை 10 மணிக்கு மேல் திருமுறை பாராயணம், சிறப்பு மகா அபிஷேகம், 1008 கலச அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், மாலையில் சுவாமி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி ஆகியவை நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com