இறந்தவரின் உடலை தனியார் நிலம் வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

வெண்ணந்தூர் அருகே இறந்தவரின் உடலை தனியார் நிலம் வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறந்தவரின் உடலை தனியார் நிலம் வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு பொதுமக்கள் மறியலால் பரபரப்பு
Published on

வெண்ணந்தூர்,

வெண்ணந்தூர் அருகே அலவாய்ப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்த கம்பம் நடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். அந்த ஊர் வழக்கப்படி கோவில் திருவிழா நடைபெறும் சமயத்தில் ஒருவர் இறந்தால் அவருடைய உடலை ஊருக்கு வெளியில் உள்ள பகுதியில் அடக்கம் செய்வது வழக்கம்.

அதன்படி இறந்த கனகராஜின் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்று அலவாய்ப்பட்டி அருகே நடுப்பட்டி எல்லையில் உள்ள நரிக்கல்கரடு பகுதியில் அடக்கம் செய்ய உறவினர்கள், பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக சென்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அந்த நிலத்தின் உரிமையாளர் சசிகுமார் அங்கு வந்தார். பின்னர் தனது நிலத்தின் வழியாக உடலை கொண்டு செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததோடு இதுதொடர்பாக வெண்ணந்தூர் போலீசிலும் புகார் கொடுத்தார்.

சாலை மறியல்

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ராசிபுரம் தாசில்தார் பாஸ்கர், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாரதிமோகன் ஆகியோர் ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடையாத பொதுமக்கள் திடீரென வெண்ணந்தூர்- ராசிபுரம் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சுமார் மணி நேரம் இந்த மறியல் நீடித்தது. பின்னர் பொதுமக்கள் வேறு வழியாக உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். இந்த சாலை மறியலால் வெண்ணந்தூர்-ராசிபுரம் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com