பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் நேற்று முற்றுகையிட்டனர்.
பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
Published on

நெல்லை,

தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதற்கு வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அனுமதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் அதிகாரிகள் அத்துமீறி பறிமுதல் செய்வதாகவும், பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை பிளாஸ்டிக் விற்பனை வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் முற்றுகையிட்டனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்கள் வழங்கும் வரை பிளாஸ்டிக் தடையை ஒத்திவைக்க வேண்டும், பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்படும் கடை உரிமையாளர்களிடம் அபராத தொகை வசூலிக்கப்பட கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயரிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் அசோசியேஷன் மாவட்ட தலைவர் வீரமுத்து, சுப்பிரமணியம், குணசேகரன் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com