மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்

மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்
Published on

நாமக்கல்,

ராசிபுரம் ஆர்.எம்.சி. காலனியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். இங்கு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-

ராசிபுரம் நகராட்சி 23-வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எம்.சி. காலனியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வருகிறோம். எங்கள் தெருவுக்கு செல்லும் வழியில் 3 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.

அகற்ற உத்தரவு

இதனால் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் அந்த வழியாக செல்ல முடியவில்லை. குடிபோதையில் இருக்கும் நபர்கள் பெண்களை கிண்டல் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் குடிபோதையில் தெருவுக்குள் வந்தும் பிரச்சினை செய்து வருகின்றனர்.

எனவே ஒரு மதுக்கடையை 6 மாதத்திற்குள் அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த கடை அகற்றபடாத நிலையில், எங்கள் பகுதியில் மேலும் ஒரு மதுக்கடை திறக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நாங்கள் நிம்மதியாக வாழ வழியில்லாமல் தவிக்கிறோம். எனவே எங்கள் தெருவுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்றி, மீண்டும் மதுக்கடை அமைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

தர்ணா போராட்டம்

இதற்கிடையே ஏற்கனவே உள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரியும், புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மனு கொடுக்க வந்த அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com