ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் நகை பறிப்பு

திட்டக்குடி அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மனைவியிடம் முகமூடி அணிந்து வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் நகையை பறித்துச்சென்றார்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் நகை பறிப்பு
Published on

திட்டக்குடி,

திட்டக்குடி அருகே உள்ள சிறுமுளை கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல். இவர் அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றார். இவருடைய மனைவி அமிர்தம்(வயது 65). இவர்களுக்கு சிறுமுளை கிராம எல்லையில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர். அந்த மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக அமிர்தம் நேற்று மதியம் 1.30 மணி அளவில் விவசாய நிலம் நோக்கி சென்றார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து நின்றது. உடனே அமிர்தம் திடுக்கிட்டு பின்னால் திரும்பி பார்த்தார்.

அப்போது முகமூடி அணிந்திருந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், மோட்டார் சைக்கிளில் இருந்து கத்தியுடன் இறங்கினார். பின்னர் அந்த வாலிபர், கத்தியை காட்டி மிரட்டி அமிர்தத்திடம் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை தருமாறு கூறினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர், அமிர்தம் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். அதன்பிறகு அமிர்தம், திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். ஆனால் சம்பவம் நடந்த இடம் கிராம எல்லைப்பகுதி என்பதால், அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற அவர், நடந்த சம்பவத்தை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இது பற்றி திட்டக்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் நேரில் சென்று, நடந்த சம்பவம் குறித்து அமிர்தத்திடம் விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் முகமூடி அணிந்து பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com