நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது 14 பேர் காயம்

புலிவலம் அருகே நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட 14 பேர் காயமடைந்தனர்.
நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது 14 பேர் காயம்
Published on

புலிவலம்,

திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே ஓமாந்தூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான நெல் கிடங்கு உள்ளது. இங்கிருந்து பெரமங்கலத்தில் உள்ள அரிசி ஆலைக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை மண்ணச்சநல்லூர் எதுமலை ரோடு காமராஜ் நகரை சேர்ந்த மயில்(வயது 48) ஓட்டினார்.

லாரியில் மூட்டைகளுக்கு மேற்பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 13 பேர் அமர்ந்து இருந்தனர். புலிவலம் - ஓமாந்தூர் சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 13 தொழிலாளர்களும் கீழே விழுந்தனர். நெல் மூட்டைகளும் சரிந்து விழுந்தன.

இந்த விபத்தில் டிரைவர் மயில் உள்ளிட்ட 14 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு புலிவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து புலிவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com