சாலை பாதுகாப்பு வார விழா நிறைவு: கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு சமரசம் கிடையாது கவர்னர் ஆவேசம்

கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு சமரசம் கிடையாது. நீதிமன்றம் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
சாலை பாதுகாப்பு வார விழா நிறைவு: கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு சமரசம் கிடையாது கவர்னர் ஆவேசம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று கடற்கரை காந்திதிடலில் நடந்தது.

விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

புதுச்சேரி அமைதியான, தூய்மையான மாநிலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு போக்குவரத்து குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும் மதிப்பதில்லை.

மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது. இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் செல்வது, வாகனங்களை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துவது போன்றவை குற்றமாக கருதப்படுகிறது. அதுபோல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது குற்றம்தான். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி செல்வதால் விலை மதிப்பில்லாத உயிர் இழப்பு ஏற்படுகிறது. ஒருவர் உயிரிழக்கும் போது அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது.

குழந்தைகள் பெற்றோரின்றி தவிக்கின்றனர். விபத்து வழக்கிற்கான கோர்ட்டுக்கு செல்லும்போது நேரம், பணம் வீணாகிறது. விபத்தால் உயிரிழக்கும் குடும்பங்களுக்கு விதவை பென்ஷன் வழங்குவது மூலம் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது. சுகாதாரத்துறைக்கு மருத்துவ செலவும் ஏற்படுகிறது. முதல்அமைச்சர் நாராயணசாமியின் மனைவி கூட வாகன விபத்தில் உயிரிழந்தார். அதுகூட ஹெல்மெட் அணியாதது தான் காரணம். எனவே கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு சமரசம் கிடையாது. அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.

அவ்வாறு அணியாமல் செல்வோர் மீது போக்குவரத்து போலீசார், பல்கலைக்கழக மாணவர்கள், தன்னார்வலர்கள் வாகன எண்ணை குறித்து வைத்து நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம். நீதிமன்றம் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும். சட்டம்ஒழுங்கை சீர்குலைப்பது, திருடுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கை செய்து விடமுடியுமா? அதுபோல் தான் ஹெல்மெட் அணியாமல் செல்வோரை வெறுமனே விடமுடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் போக்குவரத்து துறை செயலர் சரண், ஆணையர் சிவக்குமார், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் அபூர்வ குப்தா, ராகுல் அல்வால் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com