சாலை பணியை தடுத்து நிறுத்திய வனத்துறை அதிகாரிகள்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலை பணியை தடுத்து நிறுத்திய வனத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை பணியை தடுத்து நிறுத்திய வனத்துறை அதிகாரிகள்
Published on

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காரப்பட்டு அம்பேத்கர் தெருவில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டது.

அந்த சாலை தற்போது மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இருப்பினும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தாங்களே தற்காலிகமாக சாலையை சீரமைக்க முடிவு செய்து அருகில் உள்ள ஏரியில் இருந்து மண் எடுத்து வந்தனர். இதனை பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று காலை சமப்படுத்தினார்கள்.

இதையறிந்ததும் உளுந்தூர்பேட்டை வனத்துறை அதிகாரிகள் 5 பேர் ஒரு ஜீப்பில் அங்கு வந்தனர். அவர்கள், பொதுமக்களிடம் சென்று இது வனத்துறைக்கு சொந்தமான இடம், இங்கு சாலை போடக்கூடாது என்று கூறி அந்த பணியை தடுத்து நிறுத்தினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், வனத்துறை அதிகாரிகளையும், அவர்கள் வந்த ஜீப்பையும் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே இங்கு சாலை போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மின்கம்பங்கள், குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நாங்களும் தவறாமல் வீட்டுவரி செலுத்தி வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதோடு சாலையை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு வனத்துறை அதிகாரிகளும் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com