வேலூரில் ரவுடி வெட்டிக்கொலை: மற்றொரு ரவுடியின் கூட்டாளிகள் 2 பேருக்கு வலைவீச்சு

வேலூரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு ரவுடியின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூரில் ரவுடி வெட்டிக்கொலை: மற்றொரு ரவுடியின் கூட்டாளிகள் 2 பேருக்கு வலைவீச்சு
Published on

வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவருடைய மகன் செல்வராஜ் (வயது 35). ராணுவத்தில் வேலை செய்து பணிநீக்கம் செய்யப்பட்டவர். சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில் தேரை தீ வைத்து எரித்ததாக இவர் மீது சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. அதேபோன்று அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது வெடிகுண்டு வீசியதாகவும் வழக்கு உள்ளது.

மேலும் குடும்பத்தகராறு காரணமாக கே.வி.குப்பத்தில் அவருடைய மாமனாரை கொலை செய்தது, அவருடைய வீட்டுக்கு தீ வைத்தது ஆகிய வழக்குகளும், வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்கும் உள்ளன. இவருக்கும் வேறு சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த செல்வராஜை அங்கு வந்த மர்மநபர் ஒருவர் ஓட, ஓட விரட்டி வெட்டினார். இதில் ஆவின் நிறுவனத்தின் கேட் முன்பு செல்வராஜ் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தார்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்வராஜ் ஆவின் முன்பு விழுந்து இறந்ததால் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அங்கிருக்கும் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் செல்வராஜ் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சத்துவாச்சாரியில் மற்றொரு ரவுடியான வீச்சு தினேஷ் என்பவருடைய கூட்டாளிகள் 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எங்கு பதுங்கியிருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com