திருக்கோவிலூரில் ரூ.1½ கோடியில் நவீன எரிவாயு தகனமேடை

திருக்கோவிலூரில் ரூ.1½ கோடியில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்படும் என்று நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருக்கோவிலூரில் ரூ.1½ கோடியில் நவீன எரிவாயு தகனமேடை
Published on

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் நகரமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் டி.என்.முருகன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு நகர்மன்ற துணைத்தலைவர் உமாமகேஸ்வரி குணா முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கீதா வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் மேற்கொள்ளவேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் பேசினர்.

தொடர்ந்து தலைவர் டி.என்.முருகன் பேசுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்படும். நிதி ஆதாரத்தை கணக்கில்கொண்டு படிப்படியாக செய்து முடிக்கப்படும். இருக்கின்ற நிதிநிலைமையை கருத்தில் கொண்டு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் பொது நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் உடனடி தேவையாக உள்ள பணிகள் செய்துமுடிக்கப்படும். தற்போது கோடைக்காலமாக இருப்பதால் நகராட்சியில் குடிநீர் பிரச்சினை இருந்தால் அதற்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் குரங்குகளை பிடித்து காட்டில் விடுவது, சொத்துவரி சீராய்வு செய்வது, நகராட்சியின் செயல்பாட்டிற்கு வசதியாக ஜீப் வாங்குவது, திருக்கோவிலூர் கீழையூரில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பது, சந்தப்பேட்டை ஜீவாநகரில் ரூ.45 லட்சம் செலவில் குளம் சீரமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர் மன்ற உறுப்பினர்கள், நகரசபை அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com