நகை அடகு கடை நடத்தி ரூ.1¾ கோடி மோசடி

நகை அடகு கடை நடத்தி ரூ.1¾ கோடி மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நகை அடகு கடை நடத்தி ரூ.1¾ கோடி மோசடி
Published on

திண்டுக்கல்:

நகை அடகு கடை

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த வேம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் விஜயகுமார் (வயது 55), பாலகுரு (50), ஜெயா என்ற ஜெயச்சந்திரன் (51). இவர்கள் 3 பேரும் சேர்ந்து எரியோட்டை அடுத்த கோவிலூரில் நகை அடகு கடை நடத்தி வந்தனர்.

மேலும் அப்பகுதி மக்களிடம் இருந்து வைப்பு தொகையாக பணத்தை பெற்று குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்களுக்கு வட்டியுடன் திருப்பி செலுத்தி வந்தனர். இதனால் அவர்கள் மீது அப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இதையடுத்து அந்த நகை அடகு கடையில் வைப்பு தொகையாக லட்சக்கணக்கில் பணத்தை பொதுமக்கள் செலுத்தினர்.

அந்த வகையில் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த சுப்ரமணி உள்பட 13 பேரிடம் இருந்து, ரூ.1 கோடி வரை வைப்பு தொகையாக விஜயகுமார் உள்பட 3 பேரும் பெற்றனர். ஆனால் வைப்பு தொகைக்கான முதிர்வு தேதி கடந்த பின்னரும் சுப்ரமணி உள்பட 13 பேருக்கு பணம் திரும்ப செலுத்தப்படாமல் இருந்தது.

மோசடி-தலைமறைவு

இதையடுத்து அவர்கள் அடகு கடை உரிமையாளர்களை சந்தித்து பணத்தை கேட்பதற்காக கோவிலூர் சென்றனர். அப்போது அடகு கடை மூடப்பட்டு இருப்பதையும், அதன் உரிமையாளர்கள் பணத்துடன் தலைமறைவானதும் அவர்களுக்கு தெரியவந்தது.

தாங்கள் மோசடி செய்யப்பட்டதையறிந்ததும் அதிர்ச்சியடைந்த அவர்கள், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமாரிடம் இதுகுறித்து புகார் கொடுத்தனர்.

அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விஜயகுமார் கோவிலூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர், மதுரை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் தப்பியோடிய பாலகுரு, ஜெயச்சந்திரன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com