

நவீன மீன் அங்காடி
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை ஒட்டியுள்ள லூப் சாலையின் இருபுறங்களிலும் மீன் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் குறிப்பாக வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, மீனவர்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில், பட்டினப்பாக்கம் கடற்கரை ஒட்டியுள்ள லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நிர்வாக அனுமதியும், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.9.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
366 கடைகள்
இதன் தொடர்ச்சியாக, ஒப்பந்தங்கள் கோரப்பட்டு பணிகள் விரைந்து தொடங்கப்படும். இந்த நவீன மீன் அங்காடியில் சுற்று சுவருடன் 366 மீன் கடைகள், மீனவர்கள் மற்றும் பொது மக்களுக்கான குடிநீர், கழிவறை வசதிகள், மீன்களை சுத்தம் செய்ய தனியாக 2 பகுதிகள், இந்த அங்காடி வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகே வெளியேற்றும் வகையில் 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். மேலும் 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்த வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.