ரூ.1.15 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

வீட்டை விற்பதாக கூறி ரூ.1 கோடியே 15 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
ரூ.1.15 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது
Published on

மும்பை,

மும்பை அந்தேரியை சேர்ந்தவர் சுரேஷ் கோத்தாரி (வயது46). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அருண் ஜவேரி(73) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதில் அருண் ஜவேரி தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை விற்க உள்ளதாக தெரிவித்தார். இதனை நம்பிய சுரேஷ் கோத்தாரி வீட்டை பார்வையிட்டபின், தான் வாங்குவதாக தெரிவித்தார்.

இதையடுத்து வீட்டை வாங்குவதற்காக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.1 கோடியே 15 லட்சம் பணத்தை அருண் ஜவேரியிடம் கொடுத்து உள்ளார். இந்த பணத்தை அவர் உள்பட அவரது மகன் சித்தனும் (41) பெற்று கொண்டார்.

இதன்பின்னர் சுரேஷ் கோத்தாரி பத்திர பதிவிற்காக அவர்களை தேடிய போது அருண் ஜவேரி, அவரது மகன் சித்தன் ஆகியோர் பணத்துடன் தலைமறைவாகினர். இதையடுத்து அவர் அக்கம்பக்கத்தில் விசாரித்த போது வேறு ஒருவரின் வீட்டை தன் வீடு என கூறி, பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான 2 பேரையும் பிடிக்க தீவிர விசாரணை நடத்தினர். அப்போது செல்போனின் ரகசிய நம்பரை கொண்டு தலைமறைவாக இருந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com