மளிகை கடையில் ரூ.2¼ லட்சம் திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை

திண்டுக்கல்லில் மளிகை கடையில் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.2¼ லட்சத்தை திருடி சென்றனர்.
மளிகை கடையில் ரூ.2¼ லட்சம் திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை
Published on

திண்டுக்கல்,

மளிகை கடையில் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.2 லட்சத்தை திருடி சென்ற சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் நாகல்நகர் சந்தை பகுதியை சேர்ந்தவர் வெங்கிடுசாமி. இவர், அந்த பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். இதற்கிடையே நேற்று காலை வெங்கிடுசாமி வெளியூர் செல்ல வேண்டியது இருந்தது. இதனால் அவருடைய மனைவி கடையை திறக்க சென்றார்.

அதன்படி அவர் கடையை திறந்து உள்ளே சென்ற போது, அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கடையின் மேற்கூரையில் ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கணவருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வெங்கிடுசாமி கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடையில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் சிகரெட், மிட்டாய் பாக்கெட்டுகளை காணவில்லை. நள்ளிரவில் ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பணம், பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் வெங்கிடுசாமி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில் கடையில் திருட்டு நடந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கடையில் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் திருடர் களை அடையாளம் காண்பதற்காக, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


X

Daily Thanthi
www.dailythanthi.com