ஏ.டி.எம்.மில் ரூ.22 லட்சம் கொள்ளை: 2 வருடங்களுக்கு பிறகு தனியார் நிறுவன ஊழியர் சிக்கினார்

ஏ.டி.எம்.மில் ரூ.22 லட்சம் கையாடல் செய்த வழக்கில் 2 வருடங்களுக்கு பிறகு தனியார் நிறுவன ஊழியர் சிக்கினார். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏ.டி.எம்.மில் ரூ.22 லட்சம் கொள்ளை: 2 வருடங்களுக்கு பிறகு தனியார் நிறுவன ஊழியர் சிக்கினார்
Published on

திரு.வி.க.நகர்,

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 32). இவருடைய நண்பர் ஜான்சன் பிரபு(39). இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் நிரப்பும் வேலை செய்து வந்தனர்.

அப்போது ஏ.டி.எம். எந்திரங்களுக்கான ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்து கொண்டு அயனாவரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.8 லட்சமும், ஐ.சி.எப்.பில் உள்ள ஏ.டி.எம்.மில் ரூ.9 லட்சமும், ராஜமங்கலத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.5 லட்சமும் என மொத்தம் ரூ.22 லட்சத்தை கையாடல் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இது குறித்து அந்த தனியார் நிறுவனம் சார்பில் ஐ.சி.எப். போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள 2 பேரையும் தேடி வந்தனர்.

இந்தநிலையில் தலைமறைவான ராஜாவும், ஜான்சன் பிரபுவும் கோவையில் இதேபோல் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தனர். கடந்த ஜனவரி மாதம் இருவரும் அங்குள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திலும் ரூ.56 லட்சத்தை கையாடல் செய்தனர். இது தொடர்பாக கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, ஜான்சன் பிரபு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த தகவல் ஐ.சி.எப். போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெண் இன்ஸ்பெக்டர் காமேஸ்வரி தலைமையிலான போலீசார், கோவை சிறையில் இருந்த ராஜாவை காவலில் எடுத்து சென்னை அழைத்துவந்து விசாரித்து வருகின்றனர்.

ஜான்சன் பிரபு, கைதான சில நாட்களிலேயே ஜாமீனில் வெளியே சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com