நாகர்கோவிலில் துணிகரம் ஜவுளி கடையில் ரூ.25 ஆயிரம் திருட்டு முகமூடி அணிந்த மர்மநபர் கைவரிசை

நாகர்கோவிலில் உள்ள ஜவுளி கடையில் ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்ற முகமூடி அணிந்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாகர்கோவிலில் துணிகரம் ஜவுளி கடையில் ரூ.25 ஆயிரம் திருட்டு முகமூடி அணிந்த மர்மநபர் கைவரிசை
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியை சேர்ந்தவர் ஜூலியன் பீட்டர் (வயது 33), செட்டிகுளம் கே.பி. ரோட்டில் குழந்தைகளுக்கான ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல கடையை திறப்பதற்காக சென்றார். அப்போது கடையின் ஷட்டரில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜூலியன் பீட்டர் உடனே கடைக்குள் சென்று பார்த்தார். அங்கு அவர் மேஜையில் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை காணவில்லை. இரவில் யாரோ மர்ம நபர் கடைக்குள் புகுந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

பின்னர் இதுபற்றி கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மர்ம நபர் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளாரா? என்றும் ஆய்வு செய்தனர். இதற்கிடையே மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கடையில் பல்வேறு இடங்களை மோப்பம் பிடித்த அந்த நாய், வெளியே ஓடி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.


இதை தொடர்ந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபரின் உருவம் பதிவாகி இருந்தது. மேலும் அவர் ஷட்டரை திறந்து கடைக்குள் புகும் காட்சியும், கடைக்குள் அங்குமிங்கும் நடமாடும் காட்சியும் பதிவாகி உள்ளது.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, கடைக்குள் புகுந்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர் முகமூடி அணிந்தபடி இந்த திருட்டு வேலையை செய்துள்ளார். இதனால் மர்ம நபரை அடையாளம் காணமுடியவில்லை. மேலும் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக கண்காணிப்பு கேமராவையும் நைசாக திருப்பி வைத்துள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் மர்ம நபர் பிடிபடுவார் என்றனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com