

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்திறங்கும் விமானத்தில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை கண்காணித்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சோதனை செய்தனர். அதில் அரியலூரை சேர்ந்த மகேந்திரன் (32) என்பவரை சந்தேகத்தின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டனர். இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.34 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள 723 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மகேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.