வேப்பூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை

வேப்பூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேப்பூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை
Published on

வேப்பூர்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 60). விவசாயி. இவர் தனது மனைவி ராணி(55), மருமகள் பச்சையம்மாளுடன்(35) வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று, குழந்தைவேலும், பச்சையம்மாளும், விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டனர். ராணி, வேப்பூரில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நிலத்துக்கு சென்ற பச்சையம்மாள், வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டுக்குள் இருந்து மர்மநபர் ஒருவர் வெளியே வந்தார். பின்னர் அவர் அங்கு ஹெல்மெட் அணிந்த படி மோட்டார் சைக்கிளில் தயாராக நின்று கொண்டிருந்த மற்றொரு மர்மநபருடன் ஏறி சென்றுவிட்டார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பச்சையம்மாள், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 2 பீரோக்களும் திறந்து கிடந்தன. பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 20 பவுன் நகைகளை காணவில்லை. அதனை மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, வேப்பூர் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com