

திண்டிவனம்,
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த பிரபு(வயது 34), ஜானகிராமன்(35) ஆகியோர் கந்தன்சாவடியில் தனித்தனியாக செல்போன் கடை நடத்திவருகின்றனர். 4 மாதங்களுக்கு முன்பு இவர்களை ஒரு கும்பல் அணுகி, வீடு கட்ட தோண்டியபோது புதையலாக கிடைத்த தங்க காசுகள் எங்களிடம் உள்ளது, அதனை குறைத்த விலைக்கு தருகிறோம் என்று ஆசைவார்த்தை கூறினார்கள்.
அவர்கள் காண்பித்த சில தங்கக்காசுகளை பார்த்து ஆசைப்பட்ட பிரபுவிடமும், ஜானகிராமனிடமும், ரூ.40 லட்சம் தந்தால் தங்க காசுகள் தருவதாக கூறினார்கள். ஜானகிராமனும், பிரபுவும் ரூ.40 லட்சத்துடன் திண்டி வனத்தை அடுத்த மயிலத்துக்கு வந்தனர். அவர்களிடம் அந்த கும்பல் தங்க காசுகள் நிறைந்த குடுவையை காட்டி ஏமாற்றி ரூ.40 லட்சத்தை பெற்றுக்கொண்டனர்.
ரூ.40 லட்சம் அபேஸ்
அப்போது ஒரு காரில் போலீஸ் போல வேடமிட்டுவந்த ஒரு கும்பல் இருவரிடமும் இங்கு கஞ்சா விற்கிறீர்களா? என மிரட்டி தங்ககாசு குடுவை மற்றும் ரூ.40 லட்சத்தை பறித்துக்கொண்டு தங்ககாசு விற்றவர்களையும் காரில் ஏற்றிக்கொண்டு தலைமறைவானது. இந்த மோசடி குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
இந்த வழக்கில் மோசடி கும்பலை சேர்ந்த செந்தில் என்ற சுரேஷ், ரகுராமன் ஆகியோரை 2-ந்தேதி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.31 ஆயிரம் மற்றும் கார் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
மேலும் 4 பேர் கைது
பின்னர் மோசடி கும்பலின் தலைவனான தர்மலிங்கம்(64) என்பவரை கைது செய்து ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் அவரது தம்பி ராமகிருஷ்ணன்(60) மற்றும் அதே ஊரை சேர்ந்த அருள்முருகன்(35), அவரது தம்பி மணிகண்டன்(33) ஆகியோரை கைது செய்து, ரூ.22 லட்சத்து 98 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த கும்பலிடம் இருந்து இதுவரை 2 கார்கள் மற்றும் ரூ.25 லட்சத்து 51 ஆயிரம் கைப்பற்றப்பட்டு உள்ளது. உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் அருகே மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த இடங்களை போலீசார் தோண்டி எடுத்து பணத்தை மீட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் போலீஸ் போல் வேடமிட்டு காரில் வந்த 5 பேரும் வேலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.