ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் 2 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

கட்டுமான அதிபரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்ததாக துர்பே போலீஸ் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து நவிமும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நாங்ராலே உத்தரவிட்டுள்ளார்.
ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் 2 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்
Published on

மும்பை,

நவிமும்பை, துர்பே எம்.ஐ.டி.சி. போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் சஞ்சய். இவர் கடந்த ஆண்டு கட்டுமான அதிபர் ஒருவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கட்டுமான அதிபரின் மகனை சட்டவிரோதமாக கைது செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க கட்டுமான அதிபரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து கட்டுமான அதிபர் நவிமும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நாங்ராலே உதவி கமிஷனர் நிலேஷ் ராவுத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கட்டுமான அதிபரின் புகார் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் கட்டுமான அதிபரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு உடந்தையாக சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்சந்திர தேஷ்முக் செயல்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து துர்பே போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் மற்றும் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்சந்திர தேஷ்முக் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் ஹேமந்த் நாங்ராலே உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com