மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

கொரோனா கட்டுப்பாடு காலம் வரை மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என நாகையில் இசைக்கலைஞர்கள் நாதஸ்வரம், தவிலை இசைத்து கோரிக்கை விடுத்தனர்.
மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
Published on

நாகப்பட்டினம்:

கொரோனா கட்டுப்பாடு காலம் வரை மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என நாகையில் இசைக்கலைஞர்கள் நாதஸ்வரம், தவிலை இசைத்து கோரிக்கை விடுத்தனர்.

இசைக்கலைஞர்கள்

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று நாகை அடுத்துள்ள பாலையூர் சிவன் கோவிலில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் வாத்திய கருவிகளை இசைத்து, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வீசுவதால் மக்கள் அதிகளவில் கூடும் சுப நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது கோவில் திருவிழாக்கள் ரத்து, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடு காரணமாக நாதஸ்வரம் மற்றும் தவில் இசை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டது.

ரூ.5 ஆயிரம் நிவாரணம்

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு முன்பாக நிச்சயம் செய்யப்பட்டு இருந்த திருமணங்களுக்காக மங்கள வாத்தியங்கள் இசைக்க இக்கலைஞர்களுக்கு முன்பணம் கொடுத்து புக் செய்தவர்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாக அதனை ரத்து செய்து தாங்கள் கொடுத்த முன்பணத்தை திரும்ப பெறும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் நாகை மாவட்டம் வேதாரண்யம். கீழ்வேளுர் திருப்புகலூர்.

நாகை. சிக்கல் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இசையால் மற்றவர்களை மகிழ்வித்த இசைக்கலைஞர்களின் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக ஒடுங்கிப்போய் தற்போது வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர்.

எனவே வேலையின்றி தவித்து வரும் நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்களுக்கு கொரோனா கட்டுப்பாடு காலம்வரை மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com