

நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் பீட்டர் (வயது 78). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் மறுமுனையில் பேசிய மர்ம நபர் தான் ஒரு குறிப்பிட்ட வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்கள் ஏ.டி.எம். கார்டு காலாவதி ஆகிவிட்டது. எனவே அதை புதுப்பிக்க வேண்டும், உங்களது ஏ.டி.எம். கார்டின் பின் நம்பரை தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய பீட்டர் அந்த மர்மநபரிடம் தனது ஏ.டி.எம். பின் நம்பரை கொடுத்து உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு, உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பீட்டர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று கூறியுள்ளார். அப்போதுதான் தான் மோசடி செய்யப்பட்ட விவரம் பீட்டருக்கு தெரியவந்தது. இதுகுறித்து பீட்டர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.