மூங்கில்துறைப்பட்டு அருகே, நெல் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் - பறக்கும் படையினர் நடவடிக்கை

மூங்கில்துறைப்பட்டு அருகே நெல் வியாபாரியிடம் ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அருகே, நெல் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் - பறக்கும் படையினர் நடவடிக்கை
Published on

மூங்கில்துறைப்பட்டு,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் விழுப்புரம் மாவட்டத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு பகுதியில் தேர்தல் அலுவலர் தனபால் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து அவரது பையை சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் புதுப்பட்டு நடுத்தெருவை சேர்ந்த நெல் வியாபாரியான ராஜேந்திரன்(வயது 42) என்பதும், அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை சங்கராபுரம் தாசில்தார் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com