கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம்: கனிமவள அதிகாரிக்கு 5 ஆண்டு ஜெயில்

கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கனிமவள அதிகாரிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம்: கனிமவள அதிகாரிக்கு 5 ஆண்டு ஜெயில்
Published on

நாகர்கோவில்,

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 58). இவர் கடந்த 2011-ம் ஆண்டு குமரி மாவட்டத்தில் கனிமவள உதவி இயக்குனராக பணியாற்றினார். படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று காரோடு பகுதியில் உள்ளது.

இந்த கல்குவாரியில் இருந்து மற்ற இடங்களுக்கு கற்களை கொண்டு செல்ல அனுமதி கட்டு அதிகாரி மாரிமுத்துவை, ரமேஷ்குமார் சந்தித்தார். அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக மாரிமுத்து கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ்குமார் இதுகுறித்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

5 ஆண்டு சிறை

போலீசாரின் அறிவுரைப்படி ரமேஷ்குமார் ரூ.20 ஆயிரத்தை லஞ்சமாக மாரிமுத்துவிடம் கொடுக்க, அதனை அவர் பெற்றுக்கொண்டார். அங்கு மறைந்திருந்த போலீசார் மாரிமுத்துவை கையும், களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக 15-6-2011 அன்று போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருணாசலம் நேற்று தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மாரிமுத்துவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். அரசு தரப்பில் வக்கீல் முத்துகுமாரி வாதாடினார்.

வழக்கு தொடரப்பட்ட நாளில் இருந்து மாரிமுத்து பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com