கிடா விருந்தில் கலந்து கொண்ட ரவுடி, தப்பியோட முயன்றவரை போலீசார் விரட்டிச்சென்று பிடித்தனர்

ஒரத்தநாடு அருகே கிடா விருந்தில் கலந்து கொண்ட பிரபல ரவுடி, மதுபோதையில் காருக்குள் தூங்கினார். தகவல் அறிந்து போலீசார் பிடிக்க சென்றபோது தப்பியோட முயன்றார். அவரை போலீசார் துரத்திச்சென்று பிடித்தனர். அவரிடம் இருந்து அரிவாள்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கிடா விருந்தில் கலந்து கொண்ட ரவுடி, தப்பியோட முயன்றவரை போலீசார் விரட்டிச்சென்று பிடித்தனர்
Published on

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள பாப்பாநாட்டில் நேற்று அதிகாலை கார் ஒன்று சந்தேகப்படும் வகையில் நீண்ட நேரமாக நின்றதை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து பாப்பாநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், ஏட்டு சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது போலீசாரை கண்டதும் காரில் இருந்து ஒரு வாலிபர் கீழே இறங்கி தப்பியோடினார். போலீசார் துரத்திச்சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பிறகு போலீசார் காரை சோதனை செய்தபோது அந்த காரில் பெரிய அரிவாள்கள் இருந்தன. இதனை தொடர்ந்து அரிவாள்கள் மற்றும் காரையும், பிடிபட்ட வாலிபரையும் போலீசார் பாப்பாநாடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு வைத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள மேலகொருக்கை கிராமத்தை சேர்ந்த அய்யனார்சாமி மகன் தனசேகரன்(வயது 35) என்பதும், இவர் மீது பட்டீஸ்வரம் மற்றும் திருச்சி சமயபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் உள்ள தனசேகரன், சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைதாகி கடந்த 1 மாதாத்திற்கு முன்னர் சிறையிலிருந்து வந்துள்ளார். ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனசேகரன் திருச்சி சிறையில் இருந்தபோது அங்கு அவருடன் வேறு ஒரு வழக்கில் கைதாகி அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாப்பாநாட்டை அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரது வீட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற கிடா விருந்தில் தனசேகரன் கலந்து கொண்டுள்ளார். பிறகு அவர் காரில் ஊருக்கு திரும்பி சென்றபோது மதுபோதை அதிகமானதால் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தூங்கி உள்ளார்.

அப்போதுதான் போலீசாரிடம் அவர் சிக்கிக்கொண்டு உள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்த விபரங்களை அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள், பிடிபட்ட தனசேகரனை கும்பகோணம் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து பாப்பாநாட்டிற்கு வந்த கும்பகோணம் குற்றப்பிரிவு போலீசாரிடம் தனசேகரனையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கார் மற்றும் அரிவாள்களையும் பாப்பாநாடு போலீசார் நேற்று மாலை ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com