சொந்த ஊருக்கு செல்ல டோக்கன் வழங்கப்படுவதாக வதந்தி: கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட வடமாநில தொழிலாளர்கள்

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க டோக்கன் வழங்குவதாக வதந்தி பரவியதால் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சொந்த ஊருக்கு செல்ல டோக்கன் வழங்கப்படுவதாக வதந்தி: கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட வடமாநில தொழிலாளர்கள்
Published on

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் ரெயிலில் செல்வதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது என்று வதந்தி பரவியதால் நேற்று காலை திருப்பூர் ஆண்டிப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்கு முன்பு வடமாநில தொழிலாளர்கள் திரள தொடங்கினார்கள்.

இவர்கள் பீகார், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள். திருப்பூர் இடுவம்பாளையம்,வீரபாண்டி, முருகம்பாளையம், ஆண்டிப்பாளையம், கோழிப்பண்ணை, செட்டிப்பாளையம், காலேஜ் ரோடு மற்றும் வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் தங்கியிருந்தவர்கள் கிராமநிர்வாக அதிகாரி அலுவலகம் முன்பு காத்திருந்தனர். காலை 10 மணி அளவில் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு டோக்கன் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம நிர்வாக அதிகாரி சிவகாமி, டோக்கன் வழங்கப்படவில்லை என்று கூறியும் தொழிலாளர்கள் கேட்கவில்லை.

இதைத்தொடர்ந்து தெற்கு தாசில்தார் சுந்தரம், தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார், மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஆகியோர் வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையின் போது, அதிகாரபூர்வமாக தகவல் தெரிவித்து அதன்பிறகே ரெயிலில் அனுப்பி வைக்கப்படும். எனவே வதந்தியை நம்பி வர வேண்டாம் என்றனர். இதையடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபோல் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் ஜெய்வாபாய் பள்ளி முன்பும் பீகார், ஒடிசா மாநில தொழிலாளர்கள் திரண்டனர். அவர்களை போலீசார், அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com