ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் - பணிகள் பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் - பணிகள் பாதிப்பு
Published on

கடலூர்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க தலைவரும், ஜேக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியனை கடந்த மே மாதம் 31-ந்தேதி பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை ரத்து செய்யக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று கடலூர் மாவட்டத்தில் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் ஊராட்சி செயலாளர் முதல் வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் வரை கலந்து கொண்டனர்.

கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது. இப்போராட்டம் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற்றது.

இதேபோல் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வட்டார தலைவர் சங்கர், செயலாளர் விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட துணைத்தலைவர் சீதாபதி, துணண செயலாளர் சரவணன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க துணைத்தலைவர் கொளஞ்சி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com