

மும்பை,
பிரதமர் மோடி தற்சார்பு நாடாக இந்தியாவை உருவாக்குவது பற்றி அடிக்கடி பேசி வருகிறார். இந்தநிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் ரஷியா தற்சார்பு நிலையை எட்டி இருப்பதை ஒப்பிட்டு மத்திய அரசை சிவசேனா தாக்கி உள்ளது. இதுகுறித்து சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் அக்கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் எழுதி இருப்பதாவது:-
தற்சார்பு இந்தியாவுக்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததில் ரஷியா தற்சார்பு நிலையை எட்டி உள்ளது. ஆனால் இதில் நாம் வெறும் உபதேசம் தான் செய்து வருகிறோம்.
இந்திய அரசியல்வாதிகள் ரஷியாவின் மாதிரியை பின்பற்ற மாட்டார்கள். ஏனென்றால், அவர்களது காதல் அமெரிக்காவுடன் தான் உள்ளது.
ரஷியாவின் தடுப்பு மருந்துக்கு எதிராக உலகம் முழுவதும் பிரசாரங்கள் எழுந்த நிலையில், அந்த நாட்டு அதிபர் புதின் தடுப்பூசி மருந்தை தனது மகளுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தி, தனது நாட்டு மக்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கினார். தற்சார்பு விவகாரத்தில் உலகிற்கு முதல் பாடத்தை ரஷியா தான் கற்று கொடுத்து உள்ளது. இது தான் வல்லரசுக்கான அறிகுறி.
பிரதமர் தனிமைப்படுத்தி கொள்வாரா?
ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் அவருடன் கைகுலுக்கி கொண்டதால், பிரதமர் மோடி தன்னை தனிமைப்படுத்தி கொள்வாரா?
முன்பெல்லாம் மோடி, அமித்ஷா மீது தான் பயம் இருந்தது. தற்போது அவர்களை விட கொரோனா தொற்றின் மீது தான் அதிக பயம் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.