சேலம்: காரில் 25 பவுன் நகையை திருடியவர் கைது

சேலத்தில் காரில் வைத்திருந்த 25 பவுன் நகையை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்: காரில் 25 பவுன் நகையை திருடியவர் கைது
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள வேம்படிதாளம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 55). இவர் கடந்த மாதம் 30-ந் தேதி தனது குடும்பத்துடன் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் வந்தார். பின்னர் அவர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக காருக்கு வந்தனர். அப்போது காரில் இருந்த நகைப்பை இல்லாததை கண்டு சீனிவாசனின் மனைவி சாந்தி அதிர்ச்சி அடைந்தார்.

இந்த பையில் இருந்த 25 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் சாந்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் நேற்று புதிய பஸ்நிலையம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதனால் அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர், தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (35) என்பதும், சீனிவாசன் காரில் இருந்த 25 பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com