சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
Published on

சேலம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், விவசாயிகளுக்கு வறட்சி பயிர் காப்பீடு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 50 பேர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக முள்ளுவாடி கேட் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் காவிரி வேண்டும், தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுகையில் வைத்திருந்தனர்.

இதையடுத்து மாணவர்களை போலீசார் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். பின்னர், அவர்கள் பழைய நாட்டாண்மை கட்டிடம் அருகே சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு சிறிது நேரம் தொடர் கோஷங்களை எழுப்பிய அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அதை கேட்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவர்கள் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்கிருந்த போலீசார், அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியும் கேட்காததால் அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பிறகு ஒவ்வொருவராக போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர்.

அப்போது மேலும் சில மாணவர்கள் நாலாபுறத்தில் இருந்து ஓடிவந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. பிறகு நிலைமையை கட்டுப்படுத்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை ஓட ஓட விரட்டினர். கலைந்து செல்ல மறுத்த மாணவர்களை கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com