சேலம்: பெண் மீது திராவகம் வீச்சு - கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண்

சேலத்தில் பெண் மீது திராவகம் வீசிய கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
சேலம்: பெண் மீது திராவகம் வீச்சு - கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண்
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள எஸ்.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். டிரைவர். இவர் குகை பகுதியை சேர்ந்த காயத்ரி (வயது 31) என்பவரை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாலமுருகன் குகை பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். காயத்ரிக்கும் அதே பகுதியை சேர்ந்த மரம் அறுக்கும் தொழிலாளி சீனிவாசன் (40) என்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு மனைவியுடன் கோபித்துக்கொண்டு பாலமுருகன் எஸ்.பாப்பாரப்பட்டி சென்று விட்டார். இதனிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென காயத்ரி சீனிவாசனுடன் பேசுவதை நிறுத்தியதால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், காயத்ரியை பழிவாங்க முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் காயத்ரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சீனிவாசன், தனது நண்பர் அசோக்குமார் (38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து திராவகத்தை காயத்ரி மீது வீசினார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் சீனிவாசனை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று சீனிவாசன் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com