சேலம் அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம்
Published on

சேலம்,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு டாக்டர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி, அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவர் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், அனைத்து அரசு மருத்துவர் சங்கத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த புறநோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். இதன் காரணமாக அவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அரசு டாக்டர்கள் கூறும் போது, எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (நேற்று) புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்துள்ளோம். சேலம் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 800 டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோரிக்கைகள் குறித்து அரசு அழைத்து பேசாவிட்டால் வருகிற 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை அனைத்து அறுவை சிகிச்சைகளையும் நிறுத்துவது, முதல்-அமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சையை நிறுத்துவது, மருத்துவ மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பது என முடிவு செய்து உள்ளோம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com