

சூரமங்கலம்,
சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 44). கூலித்தொழிலாளி. இவர் காண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனது தங்கையை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் அவர் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில கொண்டலாம்பட்டி அருகே வந்த போது, மர்ம ஆசாமிகள் திடீரென்று செல்வராஜின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.
இதனால் அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது மர்ம ஆசாமிகள் 2 பேரும் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் திடீரென்று அதில் ஒருவர், செல்வராஜ் கழுத்தில் அணிந்து இருந்த 1 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டார். பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து செல்வராஜ், கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை பறித்து சென்ற 2 கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.