மாணவி சோபியாவின் தந்தை சாமிக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்

பா.ஜனதாவினர் மற்றும் போலீசார் மீது புகார் கொடுத்ததையடுத்து தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி சோபியாவின் தந்தைக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
மாணவி சோபியாவின் தந்தை சாமிக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி கந்தன்காலனியை சேர்ந்தவர் சாமி. இவருடைய மகள் சோபியா. ஆராய்ச்சி மாணவியான இவர் கடந்த 3-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அதே விமானத்தில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார்.

அப்போது சோபியா, பா.ஜனதாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சோபியாவுக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சோபியாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சோபியாவின் தந்தை சாமி, மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் சோபியாவை பா.ஜனதாவினர் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், போலீசார் பலமணி நேரம் விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் புகார் தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனுவை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதை தொடர்ந்து வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நெல்லை அரசினர் விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சாமிக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

இதனால் அன்று சாமி, அவருடைய மகள் சோபியா ஆகியோர் ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க இருப்பதாக, அவர்களின் வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com