சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தேரோட்டம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தேரோட்டம்
Published on

தொன்தாமரைகுளம்,

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. விழாவின் 11-வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு திருநடை திறத்தலும், 5 மணிக்கு சரவிளக்கு பணிவிடையும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு மலர்கள், பழங்கள் அலங்காரத்துடன் சிறப்பு பணிவிடையும், 11 மணிக்கு அய்யா தேருக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் அய்யா தலைமை பதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளினார்.

பின்னர், முத்துக்குடைகள் முன்னே செல்ல, காவி உடை அணிந்து, தலைப்பாகை அணிந்த பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர், கீழ ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக வடக்கு ரதவீதியின் தலைமை பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு மதியம் 2 மணிக்கு வந்தது. அங்கு ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று பூ, பழம், பன்னீர், வெற்றிலை ஆகிய பொருட்களை சுருளாக படைத்து அய்யாவை வழிபட்டனர். தொடர்ந்து மாலையில் திருத்தேர் நிலைக்கு வந்தது.

தேரோட்ட நிகழ்ச்சியில் நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளான கலந்து கொண்டனர்.

தலைமை பதியின் கிழக்கு வாசல் அருகில் அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு காலை, மதியம் உணவு வழங்கப்பட்டது.

தேரோட்டம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை பதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com