முகத்துவாரத்தில் மணல் திட்டுகள்: படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாமல் மீனவர்கள் தவிப்பு

சேதுபாவாசத்திரம் அருகே முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் உள்ளதால் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாமலும் கரைக்கு கொண்டு வர முடியாமலும் மீனவர்கள் தவித்து வருகிறார்கள்.
முகத்துவாரத்தில் மணல் திட்டுகள்: படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாமல் மீனவர்கள் தவிப்பு
Published on

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கொள்ளுக்காடு ஊராட்சிக்குட்பட்ட அந்தோணியார்புரம், அம்பேத்கர் நகர் மற்றும் சின்னஆவுடையார் கோயில் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீன்பிடித் தொழிலை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். அன்றாடம் கடலுக்குச் சென்று மீன்பிடித்து அதில் வரும் வருமானத்தை வைத்து தான் தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இப்பகுதி மீனவர்கள் சுமார் 80 பைபர் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அக்னி ஆற்றின் முகத்துவாரத்தில் ஆற்றில் இருந்து வரும் நீரோட்டத்தின் காரணமாக அதிக அளவில் மணல் தேங்கி கடலின் முகத்துவாரத்தை அடைத்து விடுவதால் திட்டு போல காட்சியளிக்கிறது.

அகற்ற கோரிக்கை

இதனால் படகுகளை கடலுக்குள் செலுத்த முடியாமலும், கடலுக்குள் மீன்பிடிக்க சென்று விட்டு மீண்டும் கரை திரும்பும் போது துறைமுக வாய்க்காலுக்கு படகுகளை கொண்டு வர முடியாமலும் மீனவர்கள் தவித்து வருகிறார்கள். இதனால் மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே தொழில் செய்ய வேண்டிய நிலை இவர்களுக்கு உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை கடும் முயற்சியில் உடல் உழைப்போடு அதிகப்படியான தொகை செலவு செய்து இந்த மணல் திட்டுகளை மீனவர்களே அகற்றி வரும் நிலை உள்ளது. இதனால் மீன்பிடித் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர். எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மணல் திட்டுக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com