

புளியங்குடி,
புளியங்குடி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மலையடிக்குறிச்சி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ரோந்து சென்றபோது அந்த வழியாக ஒரு டிராக்டரில் 2 பேர் மணல் கடத்தி வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் போலீசார் வருவதை கண்டவுடன் 2 பேரும் தப்பி செல்லும் நோக்கத்தில் டிராக்டரில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், டிராக்டரில் இருந்து குதித்து இறந்தவர் புளியங்குடி அருகே உள்ள தாருகாபுரம் மடத்துதெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் சுதாகர் (வயது 25) என்பது தெரியவந்தது. போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.