சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்ப ஜோதிடரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல்

சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்ப ஜோதிடரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை வருமானவரி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்ப ஜோதிடரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல்
Published on

புதுச்சேரி,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். பிரபல ஜோதிடர். பங்கு சந்தை புரோக்கர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் மூலம் சசிகலா குடும்பத்தினருடன் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. அதன்பின் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரின் குடும்ப ஜோதிடராக சந்திரசேகர் மாறினார்.

டி.டி.வி. தினகரன் எம்.பி.யாக இருந்த போது சந்திரசேகரன் டெல்லியில் அவருக்கு உதவியாளராகவும் இருந்துள்ளார். சசிகலா, தினகரன் குடும்பத்தினர், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடலூரில் உள்ள சந்திரசேகரின் வீடு, அலுவலகத்திலும் இந்த சோதனை நடந்தது. அப்போது அவர் பங்கு சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்து இருப்பது தெரியவந்தது. அவருக்கு இவ்வளவு பணம் எவ்வாறு வந்தது? அரசியல் பிரமுகரின் பணத்தை அவர் முதலீடு செய்துள்ளாரா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அவரது வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், பங்கு சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு முதலீடு செய்ததற்கான ஆவணங்கள், ஏராளமான சி.டி.க்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கடலூரில் இருந்து சந்திரசேகரை காரில் புதுவை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்தும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com