

விருதுநகர்,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் திடீரென உயிரிழந்தனர். போலீசார் தாக்கியதில் தான் தந்தை, மகன் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து ஏற்கனவே கடந்த 24-ந்தேதி சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் வியாபாரிகள் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
கடைகள் அடைப்பு
இந்தநிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கேட்கும் விதமாகவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதன்படி விருதுநகர் ஆர்.ஆர். நகரில் உள்ள 120 கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.