அரியலூரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது

அரியலூரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
அரியலூரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது
Published on

அரியலூர்,

அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், அரியலூர் மாவட்டத்தில் 13, 15, 17 ஆகிய வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள்போட்டி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் காலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது சொந்த செலவில் சைக்கிள் கொண்டு வருதல் வேண்டும்.

மாணவ-மாணவிகள் பள்ளியில் வயது சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும். மாணவ-மாணவிகள் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. (வயது வரம்பு 6, 7, 8-ம் வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்). 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. (வயது வரம்பு 9, 10-ம் வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்). 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. (வயது வரம்பு 11, 12-ம் வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்). ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகள், முதல் பத்து இடங்களை பெறுபவர்களுக்கு போட்டியில் கலந்து கொண்டமைக்கான தகுதி சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும்.

எனவே, பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் தங்களது வயது சான்றிதழ்களுடன் வருகை தந்து போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com