கத்திரி வெயில் தொடங்கியது; அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி

புதுச்சேரியில் நேற்று கத்திரி வெயில் தொடங்கியது. சாலையில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
கத்திரி வெயில் தொடங்கியது; அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி
Published on

புதுச்சேரி,

புதுவையில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. கடும் வெயில் காரணமாக பகலில் வெளியே தலைகாட்டவே மக்கள் பயந்தனர். சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அனல் காற்றால் நொந்துபோனார்கள். தகிக்கும் வெயிலால் தவித்து போன மக்களுக்கு கோடை மழை கானல் நீராகவே போய்விட்டது. பானி புயலும் திசை மாறி ஏமாற்றிவிட்டது.

இந்த நிலையில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் புதுச்சேரியில் நேற்று தொடங்கியது. கோடை வெயிலை காட்டிலும் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் என்பதால் கத்திரி வெயிலுக்கு மக்கள் பயந்து கிடந்தார்கள்.

எனினும் கத்திரி வெயில் காலத்தின் முதல்நாளான நேற்று வெயில் அவ்வளவு ஆக்ரோஷம் காட்டவில்லை. 98.6 டிகிரி வெயில்தான் பதிவாகி இருந்தது என்றாலும், அனல் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சாலையில் செல்வோரில் பெரும்பாலானோர் குடைபிடித்தபடி செல்வதை பார்க்க முடிந்தது.

இளம்பெண்கள் துப்பட்டாவை சுற்றியும், ஆண்கள் கைக்குட்டை கொண்டு முகத்தை மறைத்தபடியும் வாகனம் ஓட்டி சென்றனர். கத்திரி வெயிலுக்கு பயந்து மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக ஜூஸ், நுங்கு, வெள்ளரிப்பழம் விற்பனை சூடுபிடித்திருந்தது.

கத்திரி வெயிலின் தாக்கத்தால் பகல் முழுவதும் வீடுகளுக்குள்ளே முடங்கிய மக்கள் மாலையில் கடற்கரை, பூங்கா போன்ற சுற்றுலா தலங்களில் சென்று இளைப்பாறினர். புதுவைக்கு சுற்றுலா வந்திருந்தவர்கள் கடற்கரை செயற்கை மணல் பரப்பில் இறங்கி கடலில் குளித்து வெப்பத்தை தணித்துக்கொண்டனர். மாலை வேளையில் கடற்கரையில் காற்று வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

மக்கள் கூட்டத்தில் அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்படாமல் இருக்க கடற்கரை காந்தி சிலை அருகே கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com