மதசார்பின்மை விவகாரம்: கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை திரும்ப பெற வேண்டும் - பிரதமருக்கு சிவசேனா கோரிக்கை

மதசார்பின்மை குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதிய விவகாரம் தொடர்பாக மராட்டிய கவர்னரை திரும்ப பெற வேண்டும் என பிரதமருக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.
மதசார்பின்மை விவகாரம்: கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை திரும்ப பெற வேண்டும் - பிரதமருக்கு சிவசேனா கோரிக்கை
Published on

மும்பை,

மராட்டியத்தில் இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனா தனது கொள்கைக்கு முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் இன்னும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை. கோவில்களை திறக்கக்கோரி பாரதீய ஜனதா போராட்டம் நடத்தி வருகிறது.

இந்தநிலையில் கோவில்கள் திறக்கும் பிரச்சினையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடந்த திங்கட்கிழமை கடிதம் எழுதி இருந்தார். அதில், மராட்டியத்தில் பார்கள், ஓட்டல்கள், கடற்கரைகள் எல்லாம் திறக்கப்பட்டு உள்ள நிலையில் கோவில்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, நீங்கள் (முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே) திடீரென மதசார்பின்மைக்கு மாறி விட்டீர்களா? என்று விமர்சித்து கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு ஆளும் கட்சிகள் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரதமர் மோடிக்கு உடனடியாக கடிதம் எழுதி இருந்தார். முதல்-மந்திரிக்கு கவர்னர் எழுதிய கடிதத்தில் பயன்படுத்திய வார்த்தைகள் அதிர்ச்சி அளிப்பதாகவும், இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் மராட்டிய கவர்னரை திரும்பபெறக்கோரி பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில், கவர்னர் மாளிகையின் கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை திரும்ப பெற்றுக்கொள்ளுங் கள் என்று கோரிக்கை விடுத்து எழுதப்பட்டு உள்ளது.

மேலும் கோவில்கள் திறப்பு பிரச்சினையை பெரிதுபடுத்தி வரும் பாரதீய ஜனதாவையும் சிவசேனா கண்டித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com