சமயபுரத்தில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்

சமயபுரத்தில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமயபுரத்தில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்
Published on

சமயபுரம்,

சமயபுரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக கடைவீதி மற்றும் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளிட்ட பல இடங்களிலும் சேறும், சகதியுமாக உள்ளது. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமல்லாது, சமயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஆரம்பித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முடியவில்லை. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. பல நேரங்களில் அவ்வழியே செல்பவர்கள் தவறி விழுந்து காயத்துடன் செல்வதும் வாடிக்கையாகி வருகிறது.

நாற்று நட்டு போராட்டம்

இந்நிலையில் மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும் என்றும், பாதாள சாக்கடை திட்டபணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியும் நேற்று சமயபுரம் புதிய பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நாற்று நட்டும், அதைத்தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இதுதொடர்பாக 15 பேர் மீது சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com